தமது கையெழுத்து இயக்கம் வெற்றி….! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்.!

தமது கையெழுத்து இயக்கத்திற்கு வெற்றி என்று பாராளுமன்ற உறுப்பினர்  இராதாவுக்கு  விளங்கிவிட்டதாக முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  திலகராஜ் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் மலையக அரசியல் அரங்கத்தின்  கையெழுத்து இயக்கத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் இடம்பெறும் பாரபட்சத்தைச் சுட்டிக் காட்டியும்,  நுவரெலிய மாவட்ட மக்களுக்கு நீதி வேண்டியும், மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்து வரும் கையெழுத்து இயக்கம் முதற்கட்ட வெற்றியை அடைந்து விட்டது.  நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வே. இராதகிருஷ்ணனுக்கு நேற்றுதான் விஷயம் விளங்கி மாவட்ட அபிவிருத்தி குழுவில் பேசியிருப்பதன்  மூலம் எமது வெற்றி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிவந்த பிரகடனத்தின்படி 2021 ஆம் ஆண்டில் இருந்தே காலி மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதியே மலையக அரசியல் அரங்கம் நுவரெலிய மாவட்ட செயலாளரை சந்தித்து இது குறித்து கேட்டறிந்ததோடு உப செயலகங்கள்தான் திறக்கப்படவுள்ளது என ஊடகங்களுக்கு அறிவித்தோம். அதற்குப்பிறகே நுவரெலிய மாவட்டத்தில் இரண்டு உப பிரதேச செயலக காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து நுவரெலிய மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மனு கையெழுத்து இயக்கத்தை நடாத்தியது. இப்போது வடக்கு முதல் தெற்கு வரை கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து தேசிய ரீதியாக கவனத்தைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு அங்கமாகவே இன்று கிளிநொச்சி பகுதியில் கையெழுத்து சேகரிப்பில் ஈடுபடுகின்றோம்.

இந்த நிலையிலேயே எமது கையெழுத்து இயக்கம் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்கு எமது கையெழுத்து இயக்கம் குறித்த தகவல் தெரிந்து இருக்கிறது என்பது அவரது செய்தி அறிக்கையிலே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பனராக பேசியிருக்க வேண்டிய விடயத்தை இப்போதுதான் இராதாகிருஷ்ணன் தெரிந்து கொண்டுள்ளார் என்பது எமது அரங்கத்தின் செயற்பாடுகளுக்கு கிடைத்த முதல் வெற்றியே. தவிரவும் கையெழுத்து இயக்கம் எதுவும் இதுவரை நுவரெலியாவில் வெற்றி பெற்றதில்லை எனவும் கூறி உள்ளார். இதற்கு முன் எதற்காக அவர் நுவரெலிய மாவட்டத்தில் கையெழுத்து சேகரித்தார் என்பதுவும் அதனால் அவருக்கு கிடைக்காமல் போனது என்ன ? என்பது பற்றி நாம் அறியோம். ஆனால் நாங்கள் வடக்கு வந்து கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் மாதாமாதம் வடக்கு வந்து கையெழுத்து இட்டு வென்ற விடயம் என்ன என்பதை உலகமே அறியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் இலங்கைத் தமிழரசு கட்சி வடக்கில் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது என்பதையும்,  அதனை முன்னெடுப்பது சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் என்பதையும் அவருக்கு மலையகம் அரசியல் அரங்கம் நினைவு படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews