மாவட்ட வைத்தியசாலையை அகற்றிவிட்டு அந்த நிலத்தில் ஹோட்டல் கட்டுவதற்கு சீன நிறுவனத்திற்கு அனுமதி..!

திருகோணமலை நகரத்துக்குள் இருக்கின்ற அரச வைத்தியசாலையை அகற்றி அவ்விடத்தில் சீன நிறுவனத்தின் சங்கரி லா ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழ் மக்களிற் செறிவை குறைக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.

திருகோணமலையில் சில பகுதிகளை அனுராதபுரத்துடன் இணைக்கும்  ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக நகருக்குள் இருக்கும் அரச வைத்தியசாலையை மாற்று முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.

திருகோணமலை காட்டுப்பகுதியை அண்டிய சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை அண்மித்ததாக குறித்த வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டின் பாரிய நிதி பங்களிப்புடன் குறித்த வைத்தியசாலை கட்டிடத்தை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் முடிவுற்றுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மௌனமாக இருப்பது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. தமிழ் மக்களுடைய இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு நிலங்களை தூண்டுகின்ற அரசின் கபடத்தனமான நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக பாராளுமன்ற குரல் எழுப்பவேண்டும்.

இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறேன். திருகோணமலையில் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? அல்லது திருகோணமலையில் தமிழர்களுடைய இருப்பை அழிப்பதை இந்தியா வேடிக்கை பார்க்கப்போகிறதா? தற்போது இருக்கும் திருகோணமலை வைத்தியசாலையில்

இடப்பற்றாக்குறை என்றால் அருகிலுள்ள கிராமங்களில் காணிகளை பெற்று வைத்தியசாலையை விரிவு படுத்துங்கள். நாங்களும் உதவி செய்கிறோம்.அதை விடுத்து திருகோணமலை வைத்தியசாலையை பிறிதொரு இடத்திற்குமாற்றுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை.

இந்த விடயத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருக்க வேண்டும். வைத்தியசாலையை மாற்றப்படுவதற்கு எதிராக பாராளுமன்ற கூட்டங்களை பகிஷ்கரித்து போராட முன்வர வேண்டும். மேலும் வட பகுதி மீனவர் பிரச்சினையில் பல அரசியல் தரப்புக்கள் மூக்கை நுழைத்து இந்தியத் தமிழரையும், ஈழத்து தமிழ் மக்களையும் பிரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. எல்லை தாண்டும் மீனவர்கள் தொடர்பில் இரு நாட்டும் பேசித் தீர்மானிக்கப்படும் விடையம்.

இலங்கை அரசு இரு தரப்பும் தமிழர்கள் என்பதால் அடிபட்டுச் சாகட்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. கடற்தொழில் அமைச்சர் தமிழராக இருக்கின்ற நிலையில் அவரது செயற்பாடுகள் அரசன் ஊரைக் கொழுத்த இராசா கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொடுப்பவர் மாதிரி செயற்பட்டு வருகிறார்.

மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை ஏற்றுக்கொள்ளவில்லை.  அதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை பகைப்பதற்கு தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews