எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் ஐ.தே.க ஆர்ப்பாட்டம்…!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் ஒரு கொள்கையுடன் இந்த நாட்டை கட்டியெழுப்பினோம். அதேபோன்று நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட்டோம். நாடு தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்ட கட்சி என்ற முறையில் நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்.

நாட்டின் சகல துறைகளும் ஸ்தம்பித்து நாட்டுமக்கள் சொல்லொனா துயரங்களை எதிர்கொண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், நாட்டு மக்களுக்காக முன்னின்று செயற்படுவதற்கு எமக்கு பொறுப்பு ஒன்று உள்ளது. எனவே எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

தற்போதைய பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சகலரும் கட்சி, பேதமின்றி ஒன்றிணையுமாறு அன்றைய தினம் நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கவுள்ளோம்.

நாட்டுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே நாட்டு மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள் எனில் தனிப்பட்ட பிரச்சினையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து அரசியல்வாதிகளும் ஒரு பொது உடன்பாடுக்கு வரவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin