தனிநபர் சுமந்திரன் ரெலோவை வெளியேற்றுவது எவ்வாறு : சித்தார்த்தன் கேள்வி…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனிநபர் சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை எவ்வாறு வெளியேறுமாறு கூற முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில்  நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ரெலோ அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனிநபராக இருக்கின்ற சுமந்திரன் ஒரு கட்சியை வெளியேறுமாறு கூறுவதற்கு அருகதை அற்றவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலர் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபை பலவீனப்படுத்தினால் தமிழ் மக்களை பலவீனப்படுத்துவதாக அமையும்.

சுமந்திரனின் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தனிநபர் ஒருவருடைய கருத்தாகவே பார்க்க முடியும்.

ஆகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, பங்காளி கட்சிகள் விரைவில் சந்தித்து எமது கண்டனத்தை தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews