வெளிப்புற சாட்சியத்தை நிராகரிக்கிறோம் – ஜெனிவாவில் அமைச்சர் பீரிஸ் உரை!

புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை திறந்த நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணுவதில் முன்னேறியுள்ளது. இதேசமயம், அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மாற்றங்களை கூட்டாக ஏற்படுத்த முயல்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத் திருத்தச் சட்டத்தை திருத்தியுள்ளோம். அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 பேரை விடுதலை செய்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இழப்பீடுகளை வழங்க மேலதிகமாக 53 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளோம். இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள 92 வீத நிலப்பரப்பை உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றிய வெளிவிகார அமைச்சர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

எதிர்காலத்துக்கான நிலையான அடித்தளமாக, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தின் ஊடாக தேசிய பிரச்னைகளுக்கு ஒருமித்த அணுகுமுறையை ஜனாதிபதியும் பிரதமரும் கோரியுள்ளனர்.
புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியவற்றுடன் அரசியல் மாற்றங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் தேவை, பாராளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களின் மீதான சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றில் உள்ள அடிப்படை ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைப்பதற்காக, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

இந்த சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மற்றும் உரிய நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுவதை நாம் கூட்டாக உறுதி செய்ய வேண்டும். மாற்றத்தின் செயன்முறையானது, வலுப்படுத்த விரும்பப்படும் ஜனநாயக அமைப்புக்களை அழிக்கக்கூடாது. கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அண்மைய இடையூறுகளின் போது, சட்டம் மற்றும் பொது ஒழுங்கைப் பேணுதல் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகிக்க அனுமதிக்கும் ஒரே நோக்கத்திற்காக வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

மே 9ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பாக முழு அளவிலான விசாரணைகள், சட்டமா அதிபரின் முன்மாதிரி மற்றும் நேரடியான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன. அத்துடன், ஏற்படுத்தப்பட்ட மரணங்கள் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை வழங்கவும், சர்வதேச நாணய நிதிய ஆதரவுத் திட்டத்துக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்குகின்றோம். முன்னோக்கிச் செல்வதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் உரையாடுகின்றோம். நமது பொருளாதாரத்தை மீண்டும் நிலையான அபிவிருத்திப் பாதையில் வைப்பதற்கும், உணவு, உரம், எரிசக்தி மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளை வழங்குவதற்கும் ஒரு ஒத்திசைவான கட்டமைப்பை நாங்கள் ஒன்றிணைத்து வருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்கால சீர்திருத்த நடவடிக்கைகள் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த விளைவுகளைத் தணிப்பதற்கான இலக்கு சார்ந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை என்பதை ஒரு முக்கிய நம்பிக்கையாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 49ஆவது அமர்வு உட்பட, இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட தொடர்ச்சியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆண்டுகளில் நாங்கள் சபையுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

இன்று, நாம் ஒரு பரந்த சமூக சூழலில் குறைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முற்படுகையில், உள்நாட்டு செயன்முறைகள் மூலம் மோதலுக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பில் மேலும் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிப்பது கட்டாயமானதும், சவாலானதுமாகும். இந்த சபையுடன் செயலில் ஈடுபடுவதன் மூலம் அதைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.

கடந்த கூட்டத்தின் பின்னர், உறுதியளித்தபடி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, அது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவு, தற்போதுள்ள சட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தையும், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதோடு, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரங்களுக்கான காரணத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்த சபையின் கடைசி அமர்வுக்குப் பின்னர், 2022 மார்ச் முதல் ஜூன் வரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், அதன் சரிபார்ப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட்ட 83வீதத்துக்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளது. இழப்பீடுகளுக்கான அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்காக, அதன் ஆரம்ப ஒதுக்கீடான ரூபாய் 759 மில்லியனுக்கும் மேலதிகமாக, ரூபாய் 53 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92வீதத்துக்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,090 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றங்களுக்கு பல குற்றப்பத்திரிகைகளை அனுப்பியுள்ளதோடு, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் 46/1 தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்புற சாட்சியங்கள் சேகரிப்புப் பொறிமுறையை இலங்கை நிராகரிப்பதை கடந்த காலத்தில் நான் தெளிவுபடுத்தினேன்.

இந்த பொறிமுறையானது துருவப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே உதவும். இதேவேளை, இந்த சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் வளங்களில் பயனற்ற மற்றும் உதவியற்ற வீண் நிலையை ஏற்படுத்தும் என்ற எமது நம்பிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

முடிவில், இலங்கையின் சவாலான சமூக மற்றும் பொருளாதார நிலைமை குறித்து இந்த சபையின் புரிதலை நாங்கள் நாடுகின்றோம். எமக்கு முன்னால் உள்ள பல பணிகளில் ஈடுபடவும், சட்டபூர்வமான கடமைகளை மதிக்கவும் நாங்கள் உறுதியளிக்கின்றோம். இலங்கையானது பல தரப்புக் கட்டமைப்பில் பங்குபற்றுவதுடன், எமது மக்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகத்துடனும் மனித உரிமைகள் பேரவையுடனும் நெருங்கிய ஈடுபாட்டை இலங்கை தொடர்கின்றது – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews