கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆலயத்தில் வருடாந்த உற்சவத்தின் போது இருவருக்கிடையே காவடி தொடர்பான வாக்குவாதம் முற்றியதையடுத்து 27 வயது இளைஞர் மீது 17 வயதுடைய சிறுவன் கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட 17 சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தது விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews