எரிப்பொருள் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

மன்னார் – வங்காலை கிராம கடற்தொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று (18.10.2022) காலையளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் கடற்தொழிலாளர்களுக்கு தொழிலுக்கு செல்வதற்கு உரிய முறையில் எரிபொருள் கிடைப்பதில்லை என கடற்தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மன்னார்-பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமது கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்ற வங்காலை கிராம கடற்தொழிலாளர்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவை அரச அதிபரிடமும் கையளித்துள்ளனர்.

இதன் போது கடற்தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்,

மன்னார் வங்காலை கிராமத்தில் சுமார் 900 கடற்தொழிலாளர் குடும்பங்கள் கடல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கடற்தொழிலாளர்களுக்கு சுமார் 10 நாட்களுக்கு ஒரு தடவை 5 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடல் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த எரிபொருள் எமக்கு போதவில்லை. ஒரு படகில் தொழிலுக்கு சென்று வர ஒரு நாளைக்கு குறைந்தது 50 லீட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது எமக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாக்குறையாகவே உள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மறைமுகமாக கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை 800 ரூபாய் கொடுத்து வாங்கி தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin