வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டம்

வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டியும் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பாடசாலை நிறைவடைந்த பின்னர் நேற்று(14) பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் செயலக நுழைவாயிலை வழிமறித்து போராட்டம் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் பொலிஸார் காணப்பட்டிருந்தனர்.

வடக்கு ஆளுநரே வழங்கிய வாக்குறுதி எங்கே?, நிறுத்து நிறுத்து மோசடிகளை நிறுத்து, கையூட்டு பொக்கற்றில் வாக்குறுதிகள் காற்றிலா, பேஸ்புக் செயலாளரே வடக்கு கல்வியில்,ஆளுநரே மோசடிக்கு ஆதரவா, அடிமைச்சேவகம் புரியும் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டுள்ளன.

போராட்டத்தின் போது அங்கு வந்த ஆளுநர் அலுவலக அதிகாரிகள் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

கலந்துரையாடலின்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் பொ.வாகீசன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews