யாழிலிருந்து புறப்படும் மியான்மார் அகதிகள் போக்குவரத்து ஏற்பாடுகள் ஆளுநரின் கண்காணிப்பில்

கடந்த வாரம் வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் இன்று வியாழக்கிழமை யாழ். சிறைச்சாலையில் இருந்து  மூன்று பேருந்துகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன் நீர்கொழும்புக்கு புறப்பட்டனர்.

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அன்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உற்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர்.

குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து சென்று பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களுக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் பொலிசார்  கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி  இரு பேருந்துகளில் அகதிகளை நீர் கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த நிலையில் உயர் மட்டத் தலையீட்டால் யாழ். சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயவின் நேரடி கண்காணிப்பில் வட மாகாண அமைச்சுகளின் மூன்று பேருந்துகள் மூலம் குறித்த அகதிகள் இட நெருக்கடி இன்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்தோடு  அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் ஏற்பட்டால் உதவி வழங்குவதற்காக  ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் கூடவே பயணித்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews