காணியை கோரும் முல்லைத்தீவு உண்ணாவிரதம், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வன்னித் தமிழ்க் குடும்பங்கள், உள்ளுர் காணி அதிகார அலுவலகத்திற்கு இரண்டு வார காலஅவகாசம் வழங்கி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு தமது போராட்டத்தை நிறுத்தியுள்ளன.  வனவளத் திணைக்களத்தினால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியின் கைவேலிப் பகுதியில் கடந்த ஜூலை 24ஆம் திகதி தமிழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 45 குடும்பங்களுக்கு கைவேலி பிரதேசத்தில் வீட்டுத் தொகுதியொன்றை நிர்மாணித்ததோடு 2000-2009 காலப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான யுத்த சூழ்நிலையில் அந்த குடும்பங்கள் அந்த வீடுகளை விட்டு வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர்.


யுத்தம் நிறைவடைந்த பின்னர், வீடுகள் உள்ள இடங்களில் மீள்குடியேற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, 2012ஆம் ஆண்டு எல்லைக் கற்களை நட்டு அப்பகுதியை உள்ளடக்கி காணிகளும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டு கைவேலியில் வீடுகளைப் பெற்ற 45 குடும்பங்களில் பல குடும்பங்கள் வேறு பகுதிகளில் வீடுகளை அமைத்து குடியேறியுள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சிய 20 குடும்பங்கள் ஜூலை மாத ஆரம்பத்தில் தற்காலிக வீடுகளை கட்டி மீண்டும் அந்த நிலத்தில் குடியேற தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஜூலை 12ஆம் திகதி வனவள பாதுகாப்பு துறை அதிகாரிகள் துப்பாக்கி, கத்தி, கோடரி, தடிகளுடன் அந்த இடத்திற்கு வந்ததோடு, தமது வீடுகளை தாக்கிய அழித்ததோடு, தம்மில் சிலரைத் தாக்கியதாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தமது வீடுகளுக்கு தீ வைப்பதற்காக மண்ணெண்ணெயை கொண்டு வந்ததாக அவர்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

12ஆம் திகதி மாலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து கிராம அலுவலருடன் கலந்துரையாடி தீர்வு வழங்குவதாக மக்களுக்கு உறுதியளித்தனர். .

வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வு வழங்கப்படாமையால் கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் 20 குடும்பங்களையும் தமது காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் கைவேலிப் பகுதியில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் கே. கனகேஸ்வரன், நில அளவை திணைக்கள அதிகாரிகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் வன திணைக்கள அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடுடு, பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய காணிகளை அவதானித்துள்ளனர்.

வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிதிணைக்களத்திற்கு சொந்தமான காணியல்ல என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணி அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“அந்தக் காணி வனவளப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமானது அல்ல என கண்டறிந்தாலும், அதை விடுவிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் சிறிது காலம் எடுக்கும், எனவே உண்ணாவிரதப் போராட்டக்காரர்களுக்கு திருப்திகரமான முடிவை வழங்க இரண்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்ற முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் கே. கனகேஸ்வரனின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் உதயச்சந்திரன், யோகேஸ்வரன் மயூரன், கணபதி கதிர்கீரன் மற்றும் கோவிந்தன் பிரசாந்தன் ஆகிய நால்வரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews