அகிம்சை வழியில் போராடி உயிர்த் தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்த முடியாத நிலை – வினோ எம்.பி கண்டனம்

அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த ஒரு தியாகிக்கு அதே அகிம்சை வழியில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அஞ்சலி செலுத்த மறுப்பதும், நடுவீதியல் தாக்க முற்பட்டு கொலை செய்ய எத்தனிப்பதும் இந்த நாடு இன்னமும் இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை என்பதை உணர்த்துகின்றது.
கடந்த காலங்களைப்போல் ஆட்சியாளர்களினதும், அரச இயந்திரங்களின் நேரடியானதும், மறை முகமானதுமான கரங்கள் துணை நிற்பதும், வேடிக்கை பார்ப்பதும் நாம் அவதானிக்கின்ற விடயங்களாகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்  தெரிவித்துள்ளார்.
கஜேந்திரன் எம்.பி. மீதான தாக்குதலை கண்டித்து அவர் இன்று (18) விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.  குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
ஈஸ்டர் குண்டு வெடிப்பு எப்படி அழகாக திட்டமிட்டு, இனவாத திரியை எரிய வைத்து, பரவச் செய்து உயிர்களைப் பலியெடுத்து தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திய ஒரு கூட்டம் இந்த நாட்டில் வாழ்வதை நாம் கண்டோம்.
அதேபோன்று இன்னுமொரு தேர்தலுக்கு, இன்னுமொரு திரியை கொளுத்தி நாடு முழுவதும் இனவாத தீயைப் பரவச் செய்ய இன்னுமொரு கூட்டம் தயாராகின்றது.
அதன் ஒரு அங்கமே கயேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதலாகும்.
 கேவலம் ஒரு தேர்தல் வெற்றிக்காக உயிர்களைப் பலியெடுக்கும் ஒரு சமூகத்தை சுற்றி வாழ்வதையிட்டு வெட்கப்படுகின்றோம்.
சிங்கள பேரினவாத, பௌத்த மேலாதிக்க மதவாத வெறியர்கள் தமது இலக்கை எட்டும் வரை சீண்டிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எமது மக்கள் இதுவிடயத்தில் மிகவும் அவதானமாக, விவேகத்துடன் செயற்படவேண்டும். அவர்களின் திட்டத்துக்கு பலிக்கடாவாகிவிடக் கூடாது.
​திட்டமிட்டு தாக்குதல் மேற்கொண்ட காடையர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நேர்ந்த கதி இப்போதைய ஜனாதிபதி, பிரதமருக்கு ஏற்படக் கூடாது என நாம் கருதுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews