மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும், தியாகங்கள் என்றும் வீண் போகாது – வேலன் சுவாமிகள்

மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும் எனவும் தியாகங்கள் எப்பொழுதும் வீண் போகாது எனவும் வேலன்  சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல் நிகழ்வு என்பது வெறுமனே ஒரு சம்பிரதாயம் அல்ல. இன்று மட்டும் நாங்கள் ஒன்று சேர்ந்து  விட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் நினைவு கூர்ந்து விட்டு மீண்டும் அடுத்த வருடம் வரும் பொழுது மீண்டும் நினைவு கூறுகின்ற ஒரு நிகழ்வு அல்ல இது. அந்த சிந்தனை எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்வாங்கப்படுத்தல் வேண்டும். எங்களினுடைய இளைஞர்கள் சரியான திசையிலே வழிகாட்டப்பட வேண்டும். வழி நடத்தப்படவேண்டும். எங்களுக்கான உரிமைகளை, எங்களுக்கான விடுதலையை பெற வேண்டும். ஸ்ரீலங்கா அரசு ஒரு போதுமே எதையுமே தரப்போவது கிடையாது.

இப்பொழுது கூட இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்படுகின்ற விடயத்திலே எப்படி ஒரு நீதிக்கு புறம்பான தடை உத்தரவை பெற்றுக்கொண்டு இந்த கஞ்சி காய்ச்சுகின்ற நிகழ்வுகளை அடாவடியாக எங்களினுடைய கிழக்கு மாகாணத்திலே தென் தமிழீழத்தில் நடாத்திக்கொண்டிருக்கிறது  ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசு.

தங்களினுடைய உறவுகளை நினைவேந்துவதற்கு, அழுவதற்கு, அவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை செய்வதற்கு வழியில்லாமல் முடியாமல்  நாங்கள் இன்று இந்த மண்ணிலே நிற்கின்றோம்.   அன்பான உறவுகளே  நாங்கள் அனைவரும் விழித்தெழ வேண்டும். ஒன்று பட்டு ஒரு எழுச்சியாக உருவாகுவோமாக இருந்தால் எங்களால் அனைத்துமே முடியும். இன்று பூகோள  அரசியலிலே  எங்களினுடைய தமிழர் தாயகம் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

வல்லரசாக நாடாக விரும்புகின்ற நாடுகளுக்கெல்லாம் எங்களினுடைய இந்த மண், இந்த பூமி  நெடுந்தீவாக இருக்கட்டும், ஏனைய தீவுகளாக இருக்கட்டும், எங்களுடைய வடக்கு கிழக்கு தாயகத்தில் என்ன வளம் இல்லை எங்களினுடைய மண்ணிலே. இயற்கை வளங்கள் மேலோங்கியிருக்கின்றன. விவசாயம் அற்புதமாக இருக்கிறது. கடல் வளம் அற்புதமாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டால் தான் அதே போல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற எங்களினுடைய உறவுகள் அனைவரும் ஒன்றுபட்டு நாங்கள் ஒரு எழுச்சியாக ஒற்றுமையாக இருந்தால் தான் எங்கலினுடைய வளங்களை  நாங்கள் காப்பாற்ற முடியும்.

நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு நின்றால் எந்த அநீதியான செயல்பாடு நடைபெற்றாலும் எங்களினுடைய இனத்தை, எங்களினுடைய வரலாற்றை, எங்களினுடைய தொல்லியலை, எங்களினுடைய சமய வழிபாட்டு இடங்களை அளிக்கின்ற முயற்சிகள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டங்களை நாங்கள் செய்ய முடியும். அப்பொழுது தான் எங்களினுடைய போராட்டங்கள் வெற்றியடையும்.

வெறுமனே இரண்டு பேர், ஐந்து பேர் போராடுவதால் பயனில்லை. எனக்கு ஒரு இழப்பு வந்தால் தான் போராடுவேன் என்று சிந்திப்பது  சுயநலம். எல்லா சமயங்களும், எல்லா பண்பாடுகளும் பொது நலத்தை தான் பேசியிருக்கின்றன. என்னுடைய வீட்டு வாசலை வந்து தட்டும் வரை நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அகிம்சை ரீதியிலே நாங்கள் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போமாக இருந்தால் தான் எங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எங்களினுடைய மண்ணிலே இருக்க கூடிய பல வளங்களை பயன்படுத்தக்கூடிய சிந்தனைகளையும் உற்சாகத்தையும் எங்களினுடைய இளையவர்களுக்கு கொடுக்க வேண்டும். இன்று கனடா, லண்டன் என்று புலம்பெயர்ந்து இளைய சமுதாயம் ஓடிக்கொண்டிருக்கிறது.

கனேடிய தூதரகத்தில் அண்மையில் சொல்லப்பட்ட தகவல் 10000 இற்க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வடக்கு கிழக்கிலே இருந்து மட்டும்  விசாவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. எங்களுடைய இளையவர்கள் வெளியிலே நோக்கி செல்வதை தடுக்க வேண்டுமாக இருந்தால் இந்த மண்ணினுடைய வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?  சுயமாக நாங்கள் எப்படி பாவிக்கலாம்? என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும். அதனூடாகத்தான் எங்களுடைய மண்ணை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கலாம்? தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற எங்கள் அனைவருக்கும் இந்த வரலாற்று கடமை இருக்கிறது. இதனை உணர்ந்து செயற்படும்பொழுது எங்களுடைய விடுதலை சாத்தியமாகும். உலக வரலாற்றிலே தியாகங்கள் வீண் போனது கிடையாது. பலன்   நிச்சயமாக கிடைக்கும் என வேலன்  சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews