முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர் – சபா குகதாஸ் 

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையில்  தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகளின் தியாகத்தை அதே கட்டமைப்புக்குள் இருந்து தற்போது சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மறைமுகமாக கைகோர்த்து கடந்த காலங்களில் செயல்பட்ட சிலர் தற்போது வெளிப்படையாக அவர்களுக்கான ஆதரவினை கோருவதுடன் அவர்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கும் படுகொலைகளுக்கும் பொறுப்பானவர்கள் என்று தெரிந்தும் அவர்களை மீட்பர்கள் என்ற வகையில் வர்ணித்து அவர்களுக்கான ஆதரவினை கோருவது ஒட்டுமொத்தமாக விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈகம் செய்த அத்தனை ஆயிரம் மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும் போராட்டத்தில் ஆயுதம் தூக்கி போராடி போராட்டம் மௌனி பின்  முன்னாள் போராளிகள் என்ற பெயரில் சாதாரண மனித வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகிகளின் தியாகத்தை ஒட்டுமொத்தமாக விலை பேசுவதை விலை பேசும் தரப்புகள் கைவிடவேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னால் போராளிகளின் பாதுகாப்பு என்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலோ அல்லது அதன் படைகளினாலோ கொடுக்கப்பட்டது அல்ல யுத்த முடிவின் இறுதி நாட்களில் சரணடைகிற போது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினதும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினதும் உடனடி தலையீடு காரணமாக அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவுகளை மேற்கொண்டதன் அடிப்படையிலும் அவ்வாறான பதிவுகளை உட்படுத்தப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை. அதனை விட முள்ளிவாய்க்காலில் வட்டு வாகல் பகுதியில் சரணடைந்து ஓமந்தை பகுதியில் சரணடைந்து பதியப்படாமல் உடனடியாக மீளவும் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் அவர்கள் சார்ந்த உறவினர்கள் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டு ஒரு பட்டியலிலும் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியலிலும் இருப்பதை உலகம் அறியும் அதன் அடிப்படையில் ஒப்பற்ற தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்த அத்தனை தரப்புகளினதும் பெறுமதியை அளவிட முடியாது.
 அந்த தியாகத்தை  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் காலங்களில் கொடுக்கின்ற எந்தவிதமான வாக்குறுதிகளையும் இதுவரை செயல்படுத்தாத சிங்கள பேரினவாத வேட்பாளர்களுக்கு அதிலும் குறிப்பாக மிக மோசமாக விடுதலைப் போராட்டத்தை சிதைத்த வேட்பாளருக்கு  வாக்களிக்குமாறு  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் என்ற பெயரில் ஊடக அறிக்கைகள் வெளி வருவதை பெருந்தொகையான முன்னாள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் மனவேதனையுடன் கடந்த செல்வதை எல்லோரும் அறிவர் இதனால் இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் தியாகத்தையும் அதன் வலிகளையும் வேதனைகளையும் அவலங்களையும் அற்ப சலுகைகளுக்காக விலை பேசுகின்ற தரப்புகளை மக்கள் இனம் கண்டு கொள்வது காலத்தின் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews