வடமராட்சி மண்ணில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்ட பா.அரியநேத்திரனுக்கு ஆலய பிரதம குரு ஆசிகளை வழங்கியிருந்தார். அங்கிருந்து வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதி எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் நினைவிடத்திற்கு சென்று தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும் மரியாதை செலுத்தியிருந்தார்.

தொண்டைமானாறு அம்மா மணிமண்டபத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் அமைப்பாளரும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான செல்வேந்திரா தலைமையில்
இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலும் பா.அரியநேத்திரன் கலந்துக்கொண்டிருந்தார்.

இதன்போது, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பொருளார் பேராசிரியர் வி.பி. சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் அமைப்பாளர்களான த.சிற்பரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews