நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில  22.09.1995. அன்று  இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் புக்கார விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட  22 மாணவச் செல்வங்களின் 29 வது நினைவேந்தல் இன்றாகும்.

அன்றைய நாட்களில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  கிட்டத்தட்ட 3000க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் அக்காலப்பகுதியில் வசித்துவந்தனர்.

1990 காலப்பகுதியில் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களும், வடமாகாணத்தின் கிளிநொச்சிமாவட்டத்தின் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, கிராம மக்களும், யாழ்ப்பாணத்தின் வலிவடக்கு மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, வசாவிளான், வளலாய்,  போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயந்தமக்களும் 1990 தீவகத்தை ராணுவம் ஆக்கிரமித்தபோது அங்கிருந்த தப்பி வந்தமக்களும், 1991.07.14 வடமராட்சிகிழக்கின் வெற்றிலைக்கேணியில் ராணுவம் கடல் மூலம் தரையிறங்கியபோது வெற்றிலைக்கேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி போன்ற கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும், 1992ல் மாதகல், இளவாலை, பண்டத்தரிப்பு, சுழிபுரம், பொன்னாலை, மூளாய், சேந்தாங்குளம்,  பகுதிகளைசேர்ந்த மக்களும் குறிப்பாக கடல்த்தொழிலை தமது வாழ்வாதரமாய் கொண்டமக்கள் அங்கு குடியேறியிருந்தார்கள்.

இந்த மக்களுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன்  புனர்வாழ்வுக்கழகம் முகாம்களை அமைத்துக்கொடுத்திருந்தது.
மட்டக்களப்பு முகாம், திருகோணமலை முகாம், ஆனையிறவு முகாம், தட்டுவன்கொட்டி முகாம், பலாலிமுகாம், காங்கேசன்துறைமுகாம், வெற்றிலைக்கேணிமுகாம், ஆழியவளை முகாம்,  மாதகல் முகாம், இளவாலைமுகாம் என்பன
இருந்து வந்தது.

 

இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை கற்பிக்கும் பாடசாலைகளாக நாகர்கோவில் மாகாவித்தியாலயமும் நாகர்கோவில் தெற்க்கு ஆரம்ப பாடசாலையுமே இருந்து வந்தது. நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில்  கிட்டத்தட்ட. 2500 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் அக்காலப்பகுதியில்  கல்விகற்றார்கள். அந்த நாட்களில் நாகர்கோவில் கிராமம் ஒரு நகரம்போல்த்தான் இருந்தது.  சன நேரிசல் நிறைந்து இருந்தது. சந்தை ஒன்றும் இயங்கியது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒவ்வொருகிழமையும் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணத்தை வடமராட்சிகிழக்கு ப.நோ.கூ.சங்கம் தமது மூன்று கிளைகள் ஊடாக வழங்கிவந்தது.

20.09.1995.அன்று முல்லைத்திவு செம்மலைக் கடல்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகளுக்கும், கடற்படைக்கும் நடந்த கடல்  சண்டையில் கடல்புலிகள் கடற்படையின் ஐரிஸ்மோனா எனும் படைகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் கப்பலை கைப்பற்றியிருந்தார்கள். அந்தக்கப்பலை கொண்டுவந்து வடமராட்சிகிழக்கில் தமது தளம் அமைந்திருந்த நாகர்கோவிலுக்கு கிழக்குப்பகுதியில் 3Km தொலைவில் உள்ள குடாரப்பு கடலில்  நங்குரமிட்டிருந்தார்கள். அந்த கப்பலை இலக்குவைத்து புக்கார விமானங்கள் தாக்குதல் நடத்தியது.  தாக்குதல் நடாத்திய விமானங்கள் மீது புலிகள் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.  அதனால் இலக்கை அடையமுடியாத புக்காரவிமானம்கள் இரண்டும் நாகர்கோவில் கிராமத்தையும் சுற்றிவட்டமிட்டது. அந்த வேளையில் அங்கு தியாகி திலீபனின் 8ம் ஆண்டின் 8ம் நாள் நிகழ்வும் உண்ணநோன்பும் நாகர்கோவிலில் இடம்பெற்றுக்கொண்டிருந்து.  அப்போது புக்கார வட்டமிட்டபோது சந்தைக்கு வந்த மக்கள், நிவாரணம் பெறவந்தமக்கள், திலீபனின் உண்ணநோன்பில் கலந்து கொண்டிருந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்புதேடி ஓடினர். புக்கார தாழப்பறந்து வட்டமடித்தபோது பாடசாலை மாணவர்களும் சிதறி ஓடினர் . ஓடியமாணவர்களில் ஒரு குடிப்பிட்ட அளவு மாணவர்கள்.அயலில் உள்ள பெரிய புளியமரத்தின் கீழ் பாதுகாப்புத்தேடிக்கொண்டனர்.  அப்போது அடுத்து அடுத்து இரண்டு புக்கார ரக விமானங்களும் ஆறுக்குமேற்பட்ட குண்டுகளை பாடசாலையை சுற்றிவீசியது. இரண்டுகுண்டுகள் அந்தப்புளிய மரத்தின்மீது விழுந்து வெடித்தது.

அதில் சம்பவ இடத்திலேயே 21 மாணவர்கள் பலியானர்.  35க்கு மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  மாணவர்களின் வெள்ளை சீருடைகள் செங்குருதியினால் சிவப்பு சீருடைகளாக்கப்பட்டன.  அத்துடன் 5 பொது மக்களும் பலியாகினர். இந்த சம்பவத்தில் மயிலிட்டியைச்சேர்ந்த ஒருமாணவி இரண்டுகால்களையும் இழந்தார். அவர் இதன்சாட்சியாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

ஐரிஸ்மோன கப்பலின்  இழப்புக்கு தனது பழியை தீர்த்து அரசாங்கம். அதற்காக அப்பாவி மாணவர்களை கொண்றது.  விமானப்படையின் புக்கார விமானம்.

இதில் செல்வன் மயில்வாகனம் கணகநாதன், செல்வன் இராமநாதன் கோபிதரன், செல்வன் சுந்தரலிங்கம் பழனி, செல்வன் நாகமுத்து செந்தில்வேல், செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன், செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன், செல்வி அல்போன்ஸ் அமலவிஜி, செல்வி இரவிந்திரராசா அமிர்தா,செல்வி இராசரத்தினம் கவிதா, செல்வி இராமநாதன் மேதினி, செல்வி மார்க்கண்டு நாகலோஜினி, செல்வி பாலச்சந்திரன் ரஜிதா, செல்வி தாமோதரம் சகுந்தலா, செல்வி இராமச்சந்திரன் சங்கீதா, செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி, செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி, செல்வி குகசரவணமலை தர்சினி, செல்வி சுந்தரலிங்கம் தர்சினி, செல்வி பூலோகராசா துஷாந்தினி, செல்வி நவரத்தினசாமி உமாதேவி, செல்வி தர்மலிங்கம் துஷந்தினி ஆகிய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நினைவு பகீர்வுடன்

இ.முரளிதரன்
வடமராட்சிகிழக்கு
21/09/2024

Recommended For You

About the Author: Editor Elukainews