உயிர்த்த ஞாயிறு அறிக்கையிடல்: ஊடகவியலாளரை கைது செய்ய சதி?

தன்னை கைது செய்ய திட்டமிடப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்துவது குறித்த தனது செய்தி அறிக்கையிடலுடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபடுவதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணை  திணைக்களம் தனது ஊடக அறிக்கையிடலானது பொய்யானதாக முத்திரை குத்தி, நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாக தரிந்து தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள ஒரேயொரு முறைப்பாட்டுன் இணைந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா, ஒக்டோபர் 9, 2024 அன்று தனக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்து உத்தரவைக் கோரியுள்ளார்.” என தரிந்து ஜயவர்தன பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாக குறிப்பிட்டு தன்னுடைய பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

“இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, MediaLK என்ற யூடியூப் தளத்தின்  ஊடாக இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில், சமூகத்திற்கு முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய காணொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டு, இலங்கையர்களையும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.”

தன்னுடைய அறிக்கையிடலால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கோரியுள்ளதாகவும் தரிந்து ஜயவர்தனவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊடகவியலாளர் தனது நடவடிக்கையினால் இந்த சம்பவம் தொடர்பான எதிர்கால விசாரணைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தரிந்து ஜயவர்தனவிற்கு எதிராக உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு முன்னேற்றத்தை தெரிவிப்பதற்கு  நீதிமன்றத்தை மற்றுமொரு திகதியை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.”

இந்துக சில்வா என்ற குறித்த அதிகாரி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இருந்து பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி எனவும், 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுடனேயே அவர் மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பல்வேறு தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கான தன்னுடைய நீண்ட கடிதத்தில் உள்ளடக்கியுள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தன்னை கைது செய்வதை  தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.

“என்னை கைது செய்யும் சதி முயற்சியை தடுத்து நிறுத்தவும், இந்த சட்டவிரோத விசாரணையை நடத்தும் இந்துக சில்வாவுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவும், எனது பாதுகாப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கவும் தேவையான தலையீடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும்  சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கும் குறித்த கடிதத்தின் பிரதி அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews