வடக்கு கிழக்கில் கனமழை, வானிலை அறிவிப்பு…!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி நேற்று  இரவு அல்லது இன்று (14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்றும், நாளையும்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எதிர்வரும் 17.10.2024 அல்லது 18.10.2024 அன்று  தமிழ்நாட்டின் வட பகுதிக்கும், ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( கடல் மேற்பரப்பு வெப்பநிலை(Sea Surface Temperature-SST) 30 பாகை செல்சியஸ் இனை விட உயர்வாக இருப்பதாலும் மேடன் யூலியன் அலைவு (The Madden-Julian Oscillation (MJO) சாதகமாக இருப்பதனாலும் இது ஒரு தீவிர தாழமுக்கமாகவே இருக்கும்.) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று  அதிகாலை முதல் கன மழை கிடைக்க தொடங்கும். இடையிடையே இது இடி மின்னலோடு கூடிய மழையாக இருக்கும். இந்த மழை எதிர்வரும் 18.10.2024 வரை தொடரும்.
இன்று  முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட அதிகமான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாழமுக்கம் காரணமாக கடற் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதனால் கிளைகள் முறிந்து அல்லது பாறி விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக வீதியோர மரங்கள் தொடர்பாக வீதியால் பயணிப்போர் எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.
அதே வேளை எதிர்வரும் 22.10.2024 அன்றும் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
-நாகமுத்து பிரதீபராஜா-
மூத்த விரிவுரையாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

Recommended For You

About the Author: Editor Elukainews