பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி… கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் கம்பவாரிதி ஜெயராஜ் ஆலோசனை…..!

தமிழ் இளைய சமுதாயத்தினரிடையே தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளைப் பெறலாம் என கம்பவாரிதி இ. ஜெயராஜ் அபிப்பிராயத்தை முன்வைத்தார்.

நேற்று (17) திங்கட்கிழமை கிளிநொச்சி பகுதியில் அமையவுள்ள கம்பன் கழகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தை விட தமிழ் சமூகத்திலேயே ஆளுமையுள்ள பலர் உருவாகினர்.

ஆனால் தற்போது தமிழ் சமூகத்திலிருந்து ஆளுமையுள்ள பலரை உருவாக்க முடியாமல் போனமை வருத்தத்துக்குரிய விடயம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் எனக் கூறி அதற்கு பரிகாரம் கண்டு வருகிறோம். ஆனால் எதிர் காலத்தை எவ்வாறு மாற்றவேண்டும் என சிந்திக்கவில்லை.

இலங்கையில் இனிவரும் காலங்களில் இரண்டு மொழிகளைப் பேசத் தெரிந்தால் மட்டுமே எமக்கான அங்கீகாரத்தை பெற முடியும்.

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் கம்பன் கழகத்தின் ஊடாக பல செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் எமது எதிர்பார்ப்புகள் இப்போது கற்பனையாக உள்ள நிலையில் அதனை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

எமது கழகத்தின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வரை உள்ள காலப்பகுதியில் அவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு கம்பன் கழகம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களை தெரிவின் அடிப்படையில் ஒரு பகுதியினரை தெரிவு செய்து வெள்ளைக்காரர் ஒருவரை அழைத்து ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும்.

அதேபோல் சிங்கள மொழிப் பயிற்சிக்காக சிங்கள குடும்பம் ஒன்றில் இருவரை அனுப்பி ஒருவார காலம் அவர்களுடன் தங்கவைக்க வேண்டும்.

சிங்கள குடும்பத்துடன் தங்கும் போது அவர்களுக்கு மொழி கலாச்சாரம் மற்றும் புரிந்துணர்வை வழர்க்க முடிவதோடு
இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

மேலும் இராணுவ முகாம்களுக்கு பல்கலைக்கழக மாணவர்ளை ஓரிரு நாட்கள் அனுப்புவதன் மூலம் தலைமைத்துவத்தை கற்பிப்பது உதவியாக இருக்கும் இதைப் பலர் ஏற்காமல் போகலாம் ஆனால் நான் உண்மையை கூறுகிறேன்.

அதுமட்டுமல்லாது தலைமைத்துவத்தை நடைமுறையில் கற்பதற்காக அரசியலில் உள்ளவர்கள் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் வீடுகளுக்கு மாணவர்களை ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆகவே எமக்கு தென்னிந்திய அரசியல் தலைமைகளுடன் நல்ல தொடர்புகள் இருக்கிற நிலையில் வேண்டுமென்றால் அங்கேயும் சென்று பயிற்சிகளை பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கடற்தொழில் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ,மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன் ,முன்னாள் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம், மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஜெசீலன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews