
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.


கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி கடந்த 26ம் திகதி தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாகவும், பின்னர் வாகனம் ஒன்றில் வந்த குழுவினரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலும் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சம்பவத்டன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் குறித்த வைத்தியரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.