யாழ்.அளவெட்டி மேற்கில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.அளவெட்டி மேற்கு பகுதியில் நேற்று அதிகாலை 12.15 மணியளவில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அளவெட்டி மேற்கு ஜே/220 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் வலி,வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரான நல்லையா புரட்சிதாசனுடைய வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று  வீட்டின் முன் கதவு, தகரங்கள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து கதவுகள் மற்றும் மோட்டார் வாகனத்தின் எரிபொருள் தாங்கி என்பன பலத்த சேத்திற்குள்ளான நிலையில் வீட்டின் கதவை திறக்க முடியாத நிலையில் குறித்த வன்முறை குழு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் நேற்று காலை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews