வடக்கில் உயர் தரப் பரீட்சையின் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவர்!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில், உயர் தரப் பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று, பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன், பரீட்சை எழுதிய போது, கையும் மெய்யுமாக பிடிப்பட்டுள்ளார்.
பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில், கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர், கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளை, கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து, அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி, அதற்கான விடையை, குறித்த ஆசிரியர் பெற்று, அதனை, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய மாணவருக்கு, வட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

அதனையடுத்து, குறித்த மாணவர், கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ் அப் மூலம் வந்ததாக கூறப்படும், குறித்த வினாக்களுக்கான விடையை, தொலைபேசியை பார்த்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்தார்.
இதன் போது, பரீட்சை மண்டபத்தில், பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர், குறித்த மாணவன், கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக்கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார். உடனடியாக, அந்த ஆசிரியர், மாணவனை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளார்.
அதனையடுத்து, பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அடம்பன் பொலிஸ் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக, பரீட்சை மண்டபத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள், கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், மேலதிக விசாரணைகளை, உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews