பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட் காடுகள் தொடர்ச்சியாக கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி துணையுடன் சேர்ந்து அபகரிப்பு….!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட அரச காடுகள் தொடர்ச்சியாக  கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி ஆகியோரின்  துணையுடன் வெளியிடங்களைச் சேர்ந்த நபர்களால் சட்டவிரோதமாக துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைப்பாணி  பிரதேசத்தில் 54 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்களில்  14 பேர் குடும்பங்களுக்கு மாத்திரமே தாலா இரண்டு ஏக்கருக்கும் குறைவான வயல் காணிகள் உள்ளன.
ஏனைய குடும்பங்கள் வயல் காணிகள் எதுவும் இல்லாது கடந்த பல ஆண்டுகளாக தமது வாழ்வாதாரத்திற்காக பெரும் கஸ்ரங்களை எதிர் கொண்டு வருகின்றன.
இந்த பிரதேசத்தில் அவர்களுக்கான வயல் காணிகளை வழங்க கூடிய வகையில் அரச காணிகள் காணப்படுகின்ற போதும் அவற்றை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் முதல் குறித்த கிராமத்தில் சுமார் 35 ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகள் கனரக வாகனங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு துப்பரவு செய்யப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிசார் வன்னிவிளாங்குளம் பகுதியல் அமைந்துள்ள வட்டார வன வள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கிய போதும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேற்படி அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது சென்றுள்ளனர்.
நேற்றும் (05-03-2022) குறித்த பகுதியில் காடழிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு குறித்த கிராமத்தில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக வெளியிடங்களை சேர்ந்த நபர்களால் பெருமளவான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
எந்த விதமான அனுமதியும் இன்றி  சட்டவிரோதமான முறையில் கடந்த வாரம் மற்றும்  விடுமுறை நாட்களில் இவ்வாறு காடுகள் துப்பரவு செய்யப்பட்டு இருக்கின்றன எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்

குறிப்பாக இந்த கிராமத்தில் ஏழை விவசாயிகள் நீண்டகாலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த காணிகளையும் சில அதிகாரிகளின் துணையுடன் அடாத்தாக பிடித்து வைத்துள்ளனர் இதனால் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன குறித்த பிரதேசத்தில் 37 ஏக்கர் வரையான  தனியார் காணிகள்  காணப்படுகின்றன என்றும் இதில் ஏனைய காணிகள் யாவும்  ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் உள்ளன என்றும் பிரதேச செயலக தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது.

Recommended For You

About the Author: admin