வேர்களுக்கு உதவ கிளைகள் காத்திருப்பது போல் நிலத்தில் வாழும் மக்களுக்கு உதவ புலம்பெயர் தமிழர்கள் காத்திருக்கிறோம்..! |

உலகில் பல நாடுகளில் கிளைகளாக புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் சொந்த நிலத்தில் வாழும் வேர்களான மக்களுக்கு தேவையானதை வழங்கவேண்டும் என்று கனடா நாட்டிலுள்ள முன்னணி தமிழ் வர்த்தகரான குலா செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில்  இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது வேர்களது தேவையை பூர்த்தி செய்யவென கனடாவிலிருந்து சீலா சுகுமார் தம்பதியால் யாழ்.போதனாவைத்தியசாலையின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யவென ஜம்பது இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை கையளிக்கும் நிகழ்விற்காகவே நாம் யாழ் வந்துள்ளோம். யாழ்.போதனாவைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தின் ஊடாக வைத்தியசாலை தேவைகளை நிறைவு செய்யவென 50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது.

எமது குடும்பத்தலைவரது இறுதி ஆசையை முன்னிறுத்தியே சீலா சுகுமார் குடும்பம் இத்தகைய உதவியை தாமாக முன்வந்து உதவுகின்றார்கள். ஏற்கனவே கனடாவிலும் இவ்வாறான பல உதவிகளை அவர்கள் அள்ளி வழங்கியுள்ளதாகவும் குலா செல்லத்துரை தெரிவித்தார்.

உண்மையில் தாயகத்தில் யுத்த அவலங்களுடன் வாழ்கின்ற மக்களது அன்றாட வாழ்வியலை மேம்படுத்த தேவைகள் அதிகமாக உள்ளது. ஆனால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு தொடர்பாடல்கள் இன்மையால் உதவிகள் தேவைகளை கண்டறிந்து முன்னெடுக்கப்படாதுள்ளது.

இதற்கான அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்கள் தேவை. ஆனால் அது முதலில் தாயகத்திலிருந்தே தோற்றம் பெறவேண்டும். ஏனெனில் தாயகமே மரத்தின் வேர்களாகும். தேவைகளை அறிந்து உதவவேண்டியது  புலம் பெயர் உறவுகளது கடமையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஊடக சந்திப்பில் இலங்கை-கனேடிய வர்த்த கட்டமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் இளங்கோ இரட்சபாபதி மற்றும் கனேடிய இந்து மதகுரு உள்ளிட்டவர்களும் பங்கெடுத்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin