இலங்கையை நாசம் செய்த ராஜபக்ஷ சகோதரர்கள்! சர்வதேச ஊடகம் பகிரங்க குற்றச்சாட்டு –

இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் சகோதரர்கள் தொடர்பில் சர்தேச புகழ் பெற்ற Bloomberg சஞ்சிகை ராஜபக்ஷ குடும்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுரையில், “கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல் பிரஜை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நாட்டில் பல நெருக்கடிகளை உருவாக்க முடிந்தது.

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை தற்போது அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

உரத்தடை காரணமாக விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அரிசி மற்றும் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நெருக்கடிக்கு தீர்வைக் காண முடியாத நிலையில் உள்ளார்.

அவர் இதுவரை சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவை நாடியுள்ளார், ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் திவாலாகும் நிலையிலும், சர்வதேச உதவியை அவர் தன்னிச்சையாக மறுத்து வருகிறார். இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் பெருமளவிலான மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டமையே இந்தப் போராட்டங்களுக்கு பிரதான காரணமாகும்.

இலங்கையில் தினசரி ஊதியம் பெறுபவர்கள் முதல் நடத்துநர்கள் வரை அனைவருக்கும் உண்மையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களைக் குறிவைத்து 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளினால் 270 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் 2 வருடங்கள் கொரோனா கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் பணவீக்கம் 15 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிக மோசமான அதிகரிப்பாகும்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவிக்கு வந்த கோட்டபாய ராஜபக்ச தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இரண்டு பெயர்களும் மிகவும் பரீட்சயமாகும். 2004ஆம் ஆண்டு பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும், இருந்த மஹிந்த ராஜபக்ஷ 2009ஆம் ஆண்டு தனது சகோதரரைப் பாதுகாப்புச் செயலாளராக நியமித்து உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் இந்த இரண்டு பெயர்களும் பிரபல்யமடைந்தது.

இந்த போரில் சித்திரவதை, துஷ்பிரயோகம், சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் கடத்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் அல்லது காணாமல் போயினர். எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கோட்டாபய மறுத்துள்ளார்.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியானதும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி நாட்டை ஆட்சி செய்தனர். அந்த காலப்பகுதியில் ராஜபக்ஷர்கள் ஆட்சியை விட்டு வெளியேறியிருந்தனர். எப்படியிருப்பினும் 2020 ஆம் ஆண்டு ராஜபக்சவின் கட்சி ஒரு பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றது, ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்னர் செயற்பட்ட ஜனாதிபதியால் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை பெற்றதால் நெருக்கடியில் இருந்த மற்றொரு ராஜபக்சே சகோதரரான பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரட்டைக் குடியுரிமை பெற்றவர் நாடாளுமன்ற உறுப்பினராவதைத் தடுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் நீக்கப்பட்டதன் மூலம் அவரது நாடாளுமன்றப் பிரவேசம் இடம்பெற்றது.

அதன் பின்னர் ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமலும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் மற்றும் அவரது மகன் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக உள்ளார்.

பிரதமரின் ஒரு மகன் அமைச்சரவை அமைச்சராகவும், மற்றொரு மகன் பிரதமரின் தலைமை அதிகாரியாகவும், மற்றொரு உறவுக்கார மகன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதத்தை ராஜபக்சர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியவில்லை.

இதற்கிடையில், பசில் ராஜபக்ச, புதன்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோரினார். இந்த காலகட்டத்தில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் இலங்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, இது சுற்றுலாத் துறையையும் பாதித்தது.

அண்மைக்காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 30 வீதமானவர்கள் ரஷ்யர்களாகும். மேலும் உக்ரேன், போலந்து மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்தே ஏனையவர்கள் இலங்கை வந்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து இலங்கை தேயிலைக்கு பாரிய வரவேற்பு இருந்தது. ஆனால் அது தற்போது சற்று ஆபத்தில் உள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கு ராஜபக்ஷ சகோதரர்களின் எதிர்ப்பு குறையும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் திங்களன்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அடுத்த மாத தொடக்கத்தில் கொள்கை யோசனைகளை முன்வைக்க வாய்ப்புகள் உள்ளது. இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை குறைப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அதிகாரிகள் இணங்கியதன் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வடைந்தன.

ஒரு சுயாதீனமான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான வெரைட் ரிசர்ச்சின் பொருளாதார நிபுணரும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் நிஷான் டி மெல், கடன் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காலங்காலமாக இடம்பெற்ற தவறான ஆட்சியே இந்த நிலைமையை வளர்த்தெடுத்துள்ளது என பேராசிரியர் மெல் தெரிவித்தார். இலங்கையர்கள் முன்னெப்போதும் இல்லாத நிலையை இன்று அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டுப் போரின் போது இருந்ததை விட நிலைமை மோசமாக இருப்பதாகவும், இலங்கையில் தற்போது 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கையிருப்பு மாத்திரமே உள்ளது. இந்த ஆண்டு இலங்கை 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது. ஜுலை மாதம் வரையேனும் இந்த கையிருப்பு இருக்காது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சில உறுதியான தீர்வுகளை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷ்னி வீரகோன் தெரிவித்தார். இதிலிருந்து தப்புவதற்கு “வலியற்ற வழி” எதுவுமில்லை என வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலைமைகள் சிறப்பாக வருவதற்கு முன்பு நிலைமை மேலும் கடினமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது அனைத்தும் 2007 இல் மூலதனச் சந்தையில் இருந்து அரசாங்கம் கடன் வாங்கியதில் தொடங்கியது (அப்போது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார்). அதற்கமை, அந்த கடன்கள் இப்போது மொத்தக் கடன்களில் 38 வீதமாகவும், சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்களில் 10 வீதமாகவும் உள்ளன. அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதே இலங்கைக்கான சிறந்த தீர்வாகும்.

இதேவேளை, கடன்களை மறுசீரமைக்குமாறு இலங்கை புதுடெல்லி மற்றும் பெய்ஜிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவுடன் புதிய கடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கை முயன்று வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் – சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. எனினும் இந்த திட்டம் பெய்ஜிங் கட்டுப்பாட்டுக்கு அருகாமைக்கு நெருங்கியுள்ளது. மோசமான விளைவுகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இதேவேளை, துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெருமளவு கடன் வாங்கியது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை, பின்னர் கடன் நிவாரணத்திற்காக சீனாவுக்கு 99 வருட குத்தகையை அதனை இலங்கை அரசாங்கம் வழங்கியது.

இந்த நிலையில் இலங்கையின் தேவைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றத் தவறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் 2024 வரை தேர்தல் நடக்காது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் ஊடாக அதிகாரத்தில் உள்ள குடும்பத்தின் பிடியை தளர்த்த வாய்ப்பில்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அங்கு அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டார், மேலும் மக்களின் துன்பங்களை உணர்ந்ததாகக் கூறினார். ஆனால் பசி மற்றும் கோபத்திற்கு இடையில் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது கடினமான சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும். அது இலங்கை பயணிப்பதை யாரும் விரும்பாத பாதையாகும் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin