கோட்டாபயவை வீட்டுக்கு அழைக்கும் ஸ்பைடர் மேன்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நாடு முழுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இலங்கையை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாகவும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஸ்பைடர் மேன் போல் வேடமிட்டுள்ள அந்த நபர் “கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு வருமாறு” அழைப்பு விடுத்த பதாதையை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews