கால் நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை……!

தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடி காரமணாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளதாக இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்  செயலாளர்  கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு
ஊடக அறிக்கை

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள
உணவுத்தட்டுப்பாடு தொடாபானது.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலமை
காரணமாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளது. கால்நடை உற்பத்தி சுகாதாரத்றையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவானது எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வழிகோலியுள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் கடந்த காலங்களில்
தன்னிறைவு பெற்றுக்காணப்பட்ட எமது நாடானது தற்போது கால்நடை மருந்துகள் மற்றும் கால்நடைத் தீவனங்களின் விலை உயர்வினால் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் புரதச்சத்தை வழங்கும் முட்டை
மற்றும் கோழி இறைச்சியின் பற்றாக்குறையால் மக்களிடையே மந்தபோசணை ஏற்படும்
அபாயமும்  உருவாகியுள்ளது. பாலுற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்தினால்
செயற்படுத்தப்படும் திட்டங்களுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கப் பெறாமையால் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்பட்ட பாலுற்பத்தியை
பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் அதிகரிக்கப்பட்ட தீவன மற்றும் கால்நடை மருந்துகளின் விலையினால்
பாலுற்பத்திக்கான செலவீனம் மேலும் 50 வீதத்தால் அதிகரித்துள்ளமையினால்
பண்ணையாளர்களுக்கான இலாபமானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் பாலுற்பத்தித்துறையை விட்டு
விலகிச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 42வீதமாக
காணப்படும் உள்ளூர் பாலுற்பத்தியானது எதிர்காலத்தில் 30வீதமாக குறையும் அபாயமும்
ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்நியசெலவானி நெருக்கடியினால் உணவு உற்பத்திப் பொருட்களை
இறக்குமதி செய்யக்கூட முடியாத இத்தருணத்தில் உள்நாட்டு உற்பத்திச்சரிவு என்பது
நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை அதிகப்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம். மேலும் இப்பாதகமான பொருளாதார மற்றும் அரசியல் சூழல்
உருவாகுவதற்கு அரசாங்கமே நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு
அரசாங்கமானது தனது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற தவறியதன்
காரணமாகவே இந்த நிலமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews