கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்டம்.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து இன்று (19) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் குறித்த தரப்பினர் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வைத்தியர்கள் என்ற முறையில் இன்று நாம் பாரிய அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்களுக்கு வழங்குவதற்கு மருந்துகள் இல்லை. இதன் காரணமாக வைத்தியர்கள் என்ற முறையில் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றோம்.

முறையான சிகிச்சைகளை வழங்க முடியாது சிறுவர்கள் உயிரிழக்கும்போது குறிப்பாக மருந்துகள் இல்லாமல் உயிரிழக்கும்போது ஒன்றும் செய்யு முடியாத நிலைமை எமக்கு ஏற்படும்போது நாம் உண்மையில் செயலற்றவர்களாகின்றோம்.

அதுமட்டுமல்ல மருந்துகளுக்காக பிச்சை எடுக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாடுகளிலுள்ள எமது நண்பர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி இந்த மருந்தை; பெற்றுத்தாருங்கள் அந்த மருந்தைப் பெற்றுத்தாருங்கள் என்று கூறி மருந்துகளுக்காக பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வைத்தியர்கள் என்ற முறையில் இவ்வாறான ஒரு நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை.

முறையான திட்டங்கள் இல்லாததன் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று முன்கூட்டியே தெரிந்திருக்குமாயின் அதனை தடுப்பதற்கான திட்டங்களை முன்கூட்டியே வகுத்திருக்க வேண்டும். இறுதிவரை இருந்துவிட்டு கடைசி நேரத்தில் தெரிவித்தால் அது முறையற்றது.

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுந்து வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அர்ப்பணிப்புடன் சில விடயங்;களை செய்தால் இந்த நாட்டை சிறந்த பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews