இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது!

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் கத்தாரின் தோஹா ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர்களின் விசா ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் காரணமாக, அவர் தனது மகளுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய் வழியாக இத்தாலிக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

35 வயதான தாயின் வீசா ஆவணங்கள் மீதான சந்தேகம் காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்லவிருந்த புத்தளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் விசா ஆவணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேகநபர்களிடம் தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவினர் இதற்கு முன்னரும் இத்தாலிக்குச் சென்றுள்ளதாகவும், மன்னாரில் உள்ள ஒருவரின் உதவியைப் பயன்படுத்தி போலி விசா ஆவணங்களைப் பெற்று இம்முறை பயணம் செய்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews