பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் வெளியான தகவல் – இராணுவத் தளபதி கடும் கண்டனம்.

பொது அமைதியின்மைக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படையினர் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு பொதுமக்களை சுட முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்த கருத்திற்கும் அவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிகவும் கீழ்த்தரமான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் இந்த அறிக்கைக்கு முப்படையினரும் வன்மையாக கண்டிப்பதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மூலம் பொலிஸார் மீதே தாக்குதல் மேற்கொண்டு, அந்த தாக்குதல் நடத்திய குற்றத்தை தம்மீது சுமத்துவதற்கு தயாராகியுள்ளனர் என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பொது அமைதியின்மைக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட மாட்டார்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews