59 சமூக ஊடக குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:சமூக ஊடக பயனாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை….!

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கலவரமான நிலைமையில், நடந்த உயிரிழப்புகள், வீடுகள்,வாகனங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்காக பல்வேறு சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக குழுக்களை பயன்படுத்தி, வன்முறையை ஏற்படுத்தும் நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது வன்முறையை தூண்டிய 59 சமூக ஊடக குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றின் நிர்வாகிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடுகள், வாகனங்கள் உட்பட சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நடத்த பல்வேறு சமூக ஊடகங்கள் வழியாக செயற்படும் குழுக்கள், நபர்களை திரட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றமான நிலைமையில், சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டினர் என கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி தூண்டிய குழுக்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், அவை குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews