
கிளிநொச்சிஇரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் பி.ஆர் இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 12 இந்திய மீனவர்களுக்கெதிராகவும் அனுமதிப்பத்திரமின்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை , இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளை உடமையில் வைத்திருந்தமை, இழுவை மடி வலைகைளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தன
குறித்த குற்றச்சாட்டுக்களுக்கே 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.
இதே நேரம் வழமை போன்று இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தனர்