கடலில் நீராடச் சென்று காணாமல்போன மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை கடலில் கடந்த 10.05.2022 அன்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் கடல் பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் பந்து எடுக்க சென்ற நிலையில் அலையில் இழுத்து செல்லப்பட்டபோது, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு சகோதர்களும் ஈடுபட்டபோது, அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
அளம்பிலை சேர்ந்த 29 வயதுடைய பத்மநாதன் விஸ்வநாதன், 26 வயதுடைய பத்மநாதன் விஜித், 22 வயதடைய பத்மநாதன் விழித்திரன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில் கிராம மீனவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் கீழுள்ள மீனவ அமைப்புக்கள் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் 11ஆம் திகதி காலை 22 அகவையுடைய விழித்திரனது உடலம் மீட்கப்பட்டது. அன்று நண்பகல் 26 அகவையுடைய விஜித்துடைய உடலம் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாவது நபரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்ற போதும் அவரது உடலம் கிடைக்காத நிலையில, நேற்று மீட்கப்பட்ட இருவரது உடல்களுக்கு மூத்த சகோதரனது புகைப்படம் தாங்கியவாறு இறுதிக் கிரியைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மூத்த சகோதரரான விஸ்வநாதனுடைய உடலம் கற்பாறையில் சிக்குண்டு இருந்ததை இன்று மீனவர்கள் கண்ட நிலையில் உடலம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews