இ.போ.ச பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு உறுதியளித்தபடி எரிபொருள்….! ஆளுநர்.

இ.போ.ச வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மாவட்டரீதியாக எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆளுநரின் தலையீட்டினால்  ஆரம்பமாகியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில்  தெரியவருவதாவது, இ.போ.ச வடபிராந்திய 7 சாலைகளிலும்  கடமையாற்றும் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் எரிபொருள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தியதுடன், பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில் ஆளுநர் இ.போ.ச வடபிராந்திய பிரதான முகாமையாளரரை தொடர்புகொண்டு போக்குவரத்து சேவை அத்தியவசிய தேவையாக கருதப்படுகின்ற நிலையில் தடையின்றி மேற்கொள்வதற்கு  சாரதிகள், நடத்துனர்கள் கடமைக்கு செல்வதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் வடபிராந்திய பிரதி முகாமையாளருக்கும்  யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைக முல்லைத்தீவு சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்களுக்கு முள்ளியவளை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாகவும்,  அதேவேளை மன்னார் சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்களுக்கு மன்னார் நகர்ப்பகுதியிலிருந்தும் எரிபொருள் வழங்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன்,

வவுனியா சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்களுக்கு நேற்றைய தினமே எரிபொருள் வழங்குவற்கான ஏற்பாடுகள் மாவட்ட அரசு அதிபரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேபோல் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் துரித கதியில் பணிகள் இடம்பெறுவதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews