யாழ்ப்பாணத்திலிருந்து வந்தும் கிளிநொச்சியில் பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள்….!

யாழ்ப்பாணத்திலிருந்து  இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை
தந்ததும் கிளிநொச்சியிலிருந்து  தங்களது கிராம பாடசாலைகளுக்கு
செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள்
காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டுப் பணிகளை
முடித்துவிட்டு அங்கிருந்து பிரதான வீதிக்கோ அல்லது யாழ் நகருக்கு ஒரு பஸ்ஸில் பயணம் செய்து அங்கிருந்து கிளி நொச்சிக்கு பிரிதொரு பஸ்ஸில்
பயணத்தை மேற்கொண்டு வருகைதந்த போதும்  கிளிநொச்சியின் கிராமங்களில் உள்ள தங்களது பாடசாலைகளுக்குச்  உரிய நேரத்திற்குச் செல்வதற்கு பஸ்கள் இன்மையால் காலை ஒன்பது மணிவரை வீதியில் காத்திருப்பதாக தெரிவிக்கும் ஆசிரியர்கள்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையினர் தங்கள்
பணியாளர்களுக்கான எரிபொருள் கோரி பணி பகிஸ்கரிப்பில் ,ஈடுப்பட்டு
வருகின்றனர். இதேவேளை தனியார் பேரூந்துகள் போதிய எரிபொருள் இன்றி தங்களது
சேவையினை மட்டுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தாம் உரிய நேரத்திற்கு
பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளில் தினவரவை உறுதிப்படுத்துவதற்கு கைவிரல்  அடையாள இயந்திர
பயன்பாடு இருப்பதனால் தாமதமாகி செல்கின்ற போது சில வேளைகளில் அரைநாள்
கடமையாக பதியப்படுகின்றன. மாணவர்கள் முதல் பாடவேளையை வெறுமையாக
கழிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் இது தொடர்பில் உரிய
அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews