ஜனாதிபதியாகும் கனவோடு காய் நகர்த்தும் ரணில்! மக்கள் எழுச்சி கட்சி

இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காத்திருக்கும் நிலையில் அவர் ஜனாதிபதி ஆனால் நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழலே நிலவும் என மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 90 நாட்களுக்கு மேலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக்கோரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தொடர்பு போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார். என்னிடம் போராட்டக்காரர்கள் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் எனக்கோரி தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில்,தற்போது பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காய் நகர்த்தல் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்தால் நாட்டில் தொடர்ச்சியாக குழப்பகரமான சூழ்நிலை தொடர்ந்தும் இருக்கும்.

இதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்புவோர் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு சீர்செய்யப்போகிறோம் என்ற திட்ட உறுதிமொழியை வழங்குபவர்களையே நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

மேலும் தற்போதுள்ள அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் வடக்கு,கிழக்கு மலையாக சிறுபான்மை கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் கட்சியினரிடம் தமது மக்கள் தொடர்பான கோரிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews