
இன்றைய தினம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், நாடாளுமன்ற குழு கூட்டமும், நேற்று மாலை கட்சியின் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந்த கூட்டத்தின் போது டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியல் குழுவும், நாடாளுமன்ற குழுவும், இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், தற்போதைய சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்ப வாக்களிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல தரப்பினர்கள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.