
கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவிக்க தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தாமதக் கட்டணம், துறைமுகக் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணம் என்பனவற்றுக்கு மாத்திரம் கூடுதலாக ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்கும் நோக்கில் அவசரகால கொள்வனவுகளின் கீழ் இந்த டீசல் கப்பல் முன்பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் எரிபொருளை முன்பதிவு செய்தாலும், டொலர்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் வரையறுக்கப்பட்ட கையிருப்பு சந்தைக்கு கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.