
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட நுழைவு சுற்றுலா விசாவை 35 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய,1 வருட பல நுழைவு மற்றும் ஒற்றை நுழைவு சுற்றுலா விசாக்களுக்கு மேலதிகமாக புதிய விசாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னர் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட 1 வருட பல நுழைவு மற்றும் ஒற்றை நுழைவு சுற்றுலா விசாக்கள் தற்போது 06 மாத காலத்திற்கு வழங்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.