
யாழ்.நெல்லியடி மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் பொதுமக்கள், விசமிகள் மற்றும் பொறுப்புவாய்ந்தோரின் அசண்டையீனதால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையினர் , கரவெட்டி பிரதேச சபையோ பாரமுகமாக இருக்காது, மலசல கூடத்தினை தூய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் சிலர் அங்கே மது அருந்துதல் , போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் பேருந்து நிலையம் அதனை சூழவுள்ள பகுதிகள் மலசல கூடங்கள் என்பன வெற்று பியர் ரின்கள் , வெற்று மதுப்போத்தல்கள் அவ்விடத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளினால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் அச்சத்துடனையே இறங்கி செல்கின்றனர்.