
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு, வத்தளை பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த நபரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாடு அனுப்புவதாக குறித்த இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 32 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக மற்றுமொரு பாதிக்கப்பட்ட நபர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்ட நபர் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய குடும்பஸ்தர் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.