மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்.

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்வதற்காக இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகஸ்தர் சங்கத்தினர் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னறிவித்தல் விடுத்திருந்த நிலையில், குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin