கொக்குவில் – பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுட்டிப்பு….!

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவாகிய யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை 12.10.2022 காலை 9.15 மணிக்கு பிரம்படி சந்தியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.
இந்திய இராணுவத்தினரால் மிகவும் மோசமான முறையில் துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப்படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் படுகொலை செய்யப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பிரம்படி நினைவேந்தல் குழுவினரின் ஏற்பாட்டில் அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிப்புக்குள்ளான கிராம மக்கள், அரசியல் – சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்று தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி, பின் தீபங்கள் ஏற்றியும் அஞ்சலி செய்தனர்.
கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு  தினங்களில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் பிரம்படி பகுதி சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என பாகுபாடின்றி பொதுமக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டு பெரும் உயிரிழப்புகளும், சொத்தழிவுகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  தாக்குதலில் உயிர்தப்பிய அப்பகுதி மக்களில் பெரும் தொகையானோர் இப்போது புலம்பெயர்ந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட  பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை எனும் பேரில் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரை தமிழ்மக்கள் தமது மீட்பர்களாக கருதிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் கோர முகத்தை தமிழ்மக்களுக்கு காட்டிய முதல் சம்பவமாகவும் வரலாற்றில் இந்த பிரம்படிப் படுகொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews