நீண்டகாலமாக அடாவடி, அடிதடியில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை….! மாணவன் மீது தாக்குதல்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் முல்லைத்தீவிற்கு போக்குவரத்தில் ஈடுபடும் யாழ்ப்பாணம் சாலைக்கு சொந்தமான  அரச பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துநர், ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  22/10/2022 சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  மாலை 6.00 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலைய தரிப்பிடத்தில் இடம் பெற்றுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக மேலும்  தெரியவருவதாவது.
மீசாலை புத்தூர்ச்சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் பாடசாலைக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு சேவையிலீடுபடும் அரச பேருந்தில் ஏறச் சென்ற போது மாணவ மாணவிகளை ஏற வேண்டாம் என்று சாரதியும் நடத்துனரும் தெரிவித்துள்ளனர்.  ஏன் ஏற வேண்டாம் என்று  கேட்ட மாணவனின் காதைப் பொத்தி அறைந்த சாரதியும், நடத்துனரும் அம்மாணவனை தனியாக இழுத்து சென்று  மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக யாழ் பேருந்து தரிப்பிட அலுவலகத்தில் முறையிட்ட போது எல்லோரும் சேர்ந்து மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த மாணவ மாணவிகள் கதிர்காமம் செல்லும் இ.போ.ச பேருந்தில் ஏறி கொடிகாமத்தில் இறங்கிய போது யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் பஸ்சிற்கு முன் பின்னாக துரத்தி வந்த முல்லைத்தீவு சேவையிலீடுபடும் சாரதியும் நடத்துனரும் கொடிகாமத்தில் இறங்கிய மாணவர்கள் இருவரை பிடித்து தமது பேருந்தின் உள்ளே இழுத்து தாக்க முற்பட்டனர்.
இதனால் மற்றைய மாணவர்  தனது சக மாணவர்களை கீழே இறக்கி விடுமாறு கேட்க அருகில் சென்ற போது அம் மாணவர்களை இறக்கி விட்டு பேருந்தை முன்னோக்கி நகர்த்தி பேருந்திற்கு அருகில் நின்ற மாணவனை இழுத்து விழுத்திவிட்டு பேருந்தை எடுத்து சென்றுள்ளனர் இதனால் அந்த மாணவன்  பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளோடு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இ.போ.சபை ஏன் பாடசாலை மாணவர்களுக்கு பருவகாலச்சீட்டை வழங்குகிறது,  வழங்கிய பின்னர் ஏன் ஏற்ற மறுக்கின்றனர்,  காட்டு மிராண்டித்தனத்தில்  ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது  இலங்கை போக்குவரத்துச் சபையின் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பருவகாலச்சீட்டுப் பெற்ற மாணவர்கள் மூலம் வருமானம் கிடையாது என்றால் ஏன் பருவகாலச் சீட்டை இலங்கை போக்குவரத்துச் சபை வழங்குகிறது என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews