
கார் மோதியதால் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில் சச்சினி கலப்பத்தி எனும் 23 வயதான மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (08) உயிரிழந்துள்ளார்.
இவர் தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மேலும் இரு மாணவிகளும் காயமடைந்ததுடன், அவர்கள் தற்போது குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த மூன்று மாணவிகளும் பல்கலைக்கழகத்திலிருந்து ஹில்டா ஒபேசேகரவிலுள்ள தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாகன சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென அவர்கள் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.