முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி விபத்துக்குள்ளான குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். விபத்தில் முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் வாகனம் நிக்காமல் சென்றுள்ளது. இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார்.

வாகனத்தில் இருந்து மாணவி குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews