வியட்நாமில் இருந்து நாட்டை வந்தடைந்த 151 இலங்கையர்கள்

வியட்நாமிலிருந்து இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

தற்போது அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் அவர்களில் 151 பேர் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திரும்புவதற்கு உடன்பட்டதையடுத்தே இவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப, வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் யாழ்ப்பாணம்  சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews