தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணி என்றால் எமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் – சுயேட்சைக்குழு தெரிவிப்பு

தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணி என்றால் எமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என சுயேட்சைக்குழு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான தமது வேட்புமனுவை சுயேட்சைக்குழு  இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர்.

இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,

நாங்கள் இளைஞர் அணியாக இன்று போட்டியிட முன்வந்துள்ளோம். நிச்சயம் வெற்றிபெற்று உள்ளுராட்சி அதிகாரங்கள் ஊடாக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம். எமது அணியில், இளைஞர், யுவதிகள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

தமிழரசு கட்சியில் இருந்த நீங்கள் சுயேட்சையாக களமிறங்க காரணம் என்ன என வினவியபோது,

நடைபெறவுள்ள தேர்தல் உள்ளுராட்சி மன்ற தேர்தல். இதில் இளைஞர்கள் ஒருமித்து ஒரு சக்தியாக கிடைக்கும் அதிகாரங்களைக் கொண்டு மக்களிற்கு சேவை வழங்கவுள்ளோம். பிரதேசங்களில் போதுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காத நிலையிலும், இளைஞர்களிற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாத நிலையிலும் இவ்வாறு சுயேட்சையாக போட்டியிடுகிறோம்.

உங்களை தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணி எனவும், சுமந்திரன் அணி எனவும் கூறுகின்றனர். உண்மையா? என வினவிய போது,

தமிழரசு கட்சியின் மற்றுமொரு அணியென்றால், தமிழரசுக் கட்சியினரும் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

குறித்த சுயேட்சைக் குழுவில் உள்ளோரில் பெரும்பாலானோர், தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட அதிர்ப்தியினால் இளைஞர்களை ஒருங்கிணைத்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews