பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு இடமளிக்க முடியாது – வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

பனை மரங்கள் என்பது வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படுகின்ற நிலையில் அவற்றை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

பனை மரங்களை வெட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பனை மரங்கள் என்பது வடமாகாண மக்களின் வாழ்வதாரத்துக்கான ஒரு பயிராகக் காணப்படுகின்றன.

பனை மரங்களின் பாதுகாப்பு தொடர்பில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கையை விடுத்தனர்.

பனை மரங்களின் ஆயுட்காலம் 75 வருடங்களாகும். பனை மரங்கள் வளர்வதற்கு பல வருடங்கள் செல்கின்றன.

எனவே வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்துக்குரிய பயிராகக் காணப்படும் பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு இடமளிக்க முடியாது.

பனை மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே அநாவசியமான முறையில் பனை மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு வட மாகாண்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

அதற்கேற்ற வகையில், பொலிஸ் நிலையங்களினூடாக நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அநாவசியமான முறையில் பனை மரங்கள் வெட்டப்பட்டமை தொடர்பில் இதுவரை பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்யப்படவில்லை. கைதுநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பனை மரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சமூக பொலிஸ் குழுக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews