மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மதுபோதையில் வந்து விபத்தினை ஏற்படுத்திய நபர் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய நிலையில் பொலிஸார் துரத்திச்சென்று குறித்த நபரை கைது செய்த சம்பவம் நேற்று (12.02.2023) நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்திற்கு அருகில் காரில் வந்த நபர்கள் மோட்டர் சைக்கிளில் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளில் இரு பிள்ளைகளுடன் குடும்பஸ்தர் சென்ற நிலையில் இந்த விபத்தின்போது பிள்ளைகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.

படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது விபத்தினை ஏற்படுத்திய காரினை ஓட்டிவந்த நபர் கடும் மதுபோதையில் காணப்பட்ட நிலையில் பொலிஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் அவரை துரத்திச்சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews