
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.
எனினும், அந்த வாக்குறுதி அவரால் நிறைவேற்றப்படவில்லை. கட்டடங்கள் கட்டப்பட்டாலும், ஒப்பிட முடியாத மதிப்புள்ள மனித வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது. தாக்குதலின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் நீதி வழங்கப்படுவதாகப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலொன்றில் தந்தையை இழந்த ஓர் மகன் என்ற வகையில், பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரத்தையும் நன்கு அறிந்திருப்பதால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து வெளிப்படத்தன்மையுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் சட்டம், ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி அப்பாவி உயிர்களை அழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.